<==============================================================================================================>
சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............ >>>>>>>>>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>> -
<===============================================================================================================>
10 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரி ந்த தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன்..............----------========== >>>>>சொன்னவர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன்
<==============================================================================================================>
வலை பதிவை வா சிக்க...... வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் <<<<<<<<<<<<<<<<<<-----------------------------
<===============================================================================================================>

எனக்கு பிடித்த ”கவியரசன்”

எனக்கு பிடித்த ”கவியரசன்”
கவிக்கடல் கண்ணதாசன் (கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.. இதை உணர்ந்து கொண்டேன்.துன்பம்மெல்லாம் விலகும் கண்ணா......) )

Monday, December 18, 2017


நன்றி தீக்கதிர்
மறைக்க முடியாத மலை
கவிப் பேரரசு வைரமுத்து - சென்னை காமராசர் அரங்கில் பிப்ரவரி 13 அன்று தமிழாற்றுப்படை வரிசையில் கவிப்பேரரசு வைரமுத்து வழங்கிய கட்டுரையின் முழுவடிவம் இங்கு தரப்படுகிறது.
மறைமலையடிகளின் வரவு தமிழ் நெடுவெளியில் நிகழ்ந்த பெருநிகழ்வு என்றே கட்டுரைக்கிறேன். அவரை ஒரு நூற்றாண்டின் வெடிப்பு என்று சொல்லலாம். 1800 ஆண்டுகளாய்த் தமிழ் மொழியில் அப்பிக் கிடந்த அந்நியப் பாசிகளை முற்றும் களைய வந்த மொழிச் சலவையாளர் என்றும் கணிக்கலாம்.
இப்படிப்பட்ட முத்திரை வாக்கியங்களோடு இந்தக் கட்டுரையைத் தொடங்கக் காரணம் -
ஒன்பதாம் வகுப்போடு பள்ளியிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு பைஞ்சிறுவன் பல்கலைக்கழகங்கள் ஆற்றவியலாத பெரும்பணிகளைப் போற்றி முடித்துப் போந்ததற்கன்று...
தொல்காப்பியம் – திருக்குறள் போன்ற தலைத்தமிழ் நூல்களையும், சிவஞான போதம், சிவஞான சித்தியார், திருச்சிற்றம்பலக் கோவையார், நன்னூல் விருத்தி, இறையனார் அகப்பொருள் என்ற இடைத்தமிழ் நூல்களையும் 21 வயதுக்குள் நெட்டுருச் செய்துமுடித்த நினைவாற்றலுக்குமன்று...
தாமே தோற்றுவித்துக்கொண்ட ‘இந்து மதாபிமான சங்கத்தின் வாயிலாய் ஆற்றொழுக்கான பேச்சாற்றலைப் பெருக்கிக்கொண்டு ‘நாகை நீலலோசினி’, ‘பாஸ்கர ஞானோதயம்’, ‘திராவிட மந்திரி’ போன்ற இதழ்களில் எழுதிய விருப்பக் கட்டுரைகளாலும் மறுப்புக் கட்டுரைகளாலும் தம் எழுத்தாற்றலை இளமைப் பருவத்திலேயே செழுமை செய்துகொண்டதற்குமன்று...
23 வயதிலேயே சென்னைக் கிறித்துவக் கல்லூரிக்குத் தமிழாசிரியராய் விளங்கும் தகுதி பெற்றமைக்குமன்று...
டி.கே.சி என்னும் ரசிகமணிக்கும், நாவலர் சோமசுந்தர பாரதிக்கும், வையாபுரிப் பிள்ளைக்கும், திருப்புகழ் கிருஷ்ணசாமி அய்யருக்கும், தணிகைமணி செங்கல்வராய பிள்ளைக்கும் கல்லூரியில் பாடம் பயிற்றுவித்த தமிழாசான் என்ற தகைமைக்குமன்று...
தாம் பாடமாய்ப் பயிற்றுவித்த முல்லைப்பாட்டுக்கு உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரையை மெச்சவியலாமல் 28 வயதில் தாமே ஒரு புத்துரை எழுதி மாணவர்க்குப் பயிற்றுவித்த மாண்புக்காகவுமன்று...
தமிழ் – ஆங்கிலம் – சமஸ்கிருதம் என்ற மும்மொழிகளிலும் முறைபோகிய மூதறிவுக்காகவுமன்று...
வேதாசலம் என்று பெற்றோரிட்ட பெயரை மறைமலையென்று மாற்றிக்கொண்ட புரட்சிக்காகவுமன்று...
இலக்கியம் – சமயம் – தத்துவம் – வரலாறு – ஆய்வியல் – பண்பாட்டியல் – மருத்துவம் – மறைபொருள் முதலிய துறைகளில் 74 ஆண்டுகளுக்குள் 54 நூல்கள் படைத்த நுண்மாண் நுழைபுலத்துக்குமன்று...
பின் எற்றுக்கு?
தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை என்ற ஆழ்ந்த அடையாளத்திற்காகவே; எம்மொழித் துணையுமின்றித் தனித்தியங்கவல்ல செம்மொழியென்ற நம்பிக்கையைத் தமிழுக்குத் தந்ததற்காகவே.
முத்தெடுக்கப் போனவன் பவளப் பாறையைக் கண்டுபிடித்த கதைபோல், மொழித் தூய்மை காக்கப்போய் இனப்பெருமை காத்ததுதான் மறைமலை அடிகளின் திருவரலாறு.
பன்னூறாண்டுகளாய்த் தமிழ்மீது படிந்துகிடந்த அயன்மொழிச் சாம்பல்களை ஓர் ஊழிக் காற்றாய் அவர் வந்து ஊதிப் பார்த்தபோதுதான் உள்ளிருந்த தணல் “நான் தான் தமிழ் தமிழ் தமிழ்” என்று தகித்தது. சொல் என்பது வெறும் ஒலிச்சுட்டோடு பொருட்குறிப்போடு ஒழிந்துபோவதில்லை. ஒரு சொல் துலக்கப்படும்போது மறைக்கப்பட்ட வரலாற்றின் - பண்பாட்டின் மீட்டுருவாகவும் அது திகழ்கிறது என்பதும் தெற்றன விளங்கியது.
வேதாரண்யம் என்று சுட்டும்போது அந்த ஊரின் வயது – வரலாறு – பண்பாடு என்ற மூன்றும் நமக்கு முற்றும் விளங்கவில்லை. திருமறைக்காடு என்று சுட்டப்படுமிடத்து அதன் நூற்றாண்டுகளை நம்மால் நுகரமுடிகிறது.
கபிஸ்தலம் என்ற பெயரை அகழ்ந்து பார்த்தால் உள்ளே ‘குரங்காடுதுறை’ தோன்றுகிறது. அருணாசலம் என்ற சொல்லின் நதிமூலம் தேடி நகர்ந்தால் அது ‘திருவண்ணாமலை’யில் முடிகிறது. ஜம்புகேஸ்வரம் என்ற ஊர்ப்பெயரை ஊடுருவிப் பார்த்தால் உள்ளே ‘திருவானைக்காவல்’ தென்படுகிறது. இப்படித்தான் தமிழ் மொழியின்மீது வந்து படிந்த பிறமொழிகள் தமிழரின் வரலாற்றைத் துடைத்துவிட்டு, தம்மிலிருந்தே வரலாறு தொடங்கப்பெற வேண்டுமென்று சூழ்வினையாற்றின.
இந்தப் பெயர் மாற்றமென்ற பெருஞ்செயலைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிட முடியாது.
மறைமலையென்ற அலை மட்டும் அடித்திராவிடில் காலப்போக்கில் தமிழ் இலக்கியங்களின் மூலங்களும்கூட முகம்மாறிப் போயிருக்கலாம். தொல்காப்பியம் ஐந்திரமாகியிருக்கலாம்; தொல்காப்பியர் திரணதூமாக்கினி ஆகியிருக்கலாம்; திருவள்ளுவர் ஸ்ரீவல்லபராய்த் திரிந்திருக்கலாம்; தமிழ்நாடு என்பது வட இந்தியாவின் தென்துண்டு என்று வரலாறு வளைக்கப்பட்டிருக்கலாம்.
சொல்லில் என்ன இருக்கிறது என்று சொல்வார்க்கு ஒன்று சொல்ல வேண்டும்.
ராமசாமி - ராமஸ்வாமி என்ற பெயர்களின் எழுத்து மாற்றத்தால் ஒருவன் தன் சொத்துக்களை இழக்கிறபோது அறிவான் பெயரில் என்ன இருக்கிறது என்ற பேருண்மையை.
மறைமலையடிகளுக்கு எப்படித் தோன்றிற்று இந்தத் தனித்தமிழ்க் கருத்தியல்?
“விழுமிய தமிழ்ப் பழநூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளந்தைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்பதாயிற்று” என்று மறைமலையடிகள் முன்மொழிந்திருந்தாலும், அவர்தம் தொடக்க காலத்து உரைநடையில் வடசொற்கள் சிலவும் வாராமல் இல்லை.
‘பகுத்துணர்வும் மாதரும்’ என்ற கட்டுரையில் ‘பகுத்துணர்ச்சியில் சிறந்த ஜேம்ஸ் வாட் என்னும் துரைமகன்’ என்றும், ‘தனித்தமிழ் மாட்சி’ என்ற கட்டுரையில் ‘ஆங்கிலத்தில் வல்ல நல்லிசைப் புலவர்களான ஷேக்ஸ்பியர், ஷெல்லி முதலியோர்’ என்றும் வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்க்காமல் எழுதியிருக்கிறார். காளிதாசனின் சாகுந்தலத்தை மொழிபெயர்த்த காலையிலும் ‘துஷியந்தன்’ என்றும், ‘விதூஷகன்’ என்றும், ‘அப்ஸரஸ்’ என்றும் அதனதன் ஒலி வழியேதான் இயங்கியிருக்கிறார்.
தனித்தமிழ் ஊற்று எப்போது வெடித்து வீறிட்டது என்பதற்குச் சுவையான நிகழ்வொன்று சுட்டப்பெறுகிறது அவரது வாழ்வில்.
அந்திக்கதிரவன் மண்ணைப் பொன் செய்யும் ஒரு மாலைப் பொழுதில், வீட்டு முற்றத்தின் வெளிச் சோலையில், கலைபயில் தெளிவும் கட்டுரை வண்மையுங்கொண்ட தம் நிறைதிருமகள் நீலாம்பிகையோடு உலாவிய காலையில், ‘ஒரு திருப்பாட்டுப் பாடு திருமகளே’ என்று கலைக் கட்டளையிடுகிறார் தமிழ்த்தந்தை.
வள்ளலார் பாட்டுக்கு இசைகூட்டுகிறார் நீலாம்பிகை.
“பெற்றதாய்தனை மகமறந் தாலும்
பிள்ளையைப் பெறுதாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே”
இந்தப் பாடலைக் கண்மூடி உயிர்திறந்து உள்வாங்கிக்கொண்டிருந்த அடிகளாரின் நெஞ்சில் ஆழப்பாய்ந்ததொரு மின்னல்.
“நீலா! இப்பாடலில், தேகம் என்றொரு வடசொல் வந்துளது. அவ்வொன்றையும் நீக்கி அவ்விடத்தில் ‘யாக்கை’ என்னும் தமிழ்ச்சொல் பெய்யப் பெற்றிருக்குமானால் இச்செய்யுளின் ஓசையின்பம் எவ்வளவோ மேம்பட்டதாக இருந்திருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குறைகின்றது. அன்றியும், நாளடைவில் தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் நிலைபெற்று அச்சொற்களுக்கு நேரே வழங்கி வந்த நம் அருமைத் தமிழ்ச் சொற்கள் மறைந்துவிடுகின்றன” என்றார். அந்த நொடியில் உடைந்து சிதறியது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்த் தமிழை அழுத்திக்கிடந்த அயற்பாறை. அன்று முதல் மறைமலையடிகளின் வாழ்வும் வாசிப்பும் மீள்பார்வைக்குள்ளாயின.
தம் எழுத்திலும் பேச்சிலும் அயற்சொல் விரவாத தனித்தமிழையே வாழ்நாள் முழுவதும் வழங்குவதென்று உறுதிகொண்ட மறைமலையார் தாம் அவ்வண்ணமே வாழ்ந்ததன்றித் தமிழர்களையும் அவ்வண்ணமே பயிற்றுவித்தார்.
‘எழுத்தெண்ணிப் பயின்றவர்’ என்பது ஆழங்காற்பட்ட கல்வியாளர் ஒருவர் அடையும் அதிகப்படியான அடைமொழியாகும். மற்றவர்க்கது பொருந்துமோ இல்லையோ அடிகளார்க்கு மட்டும் அப்படியே பொருந்தும்.
“12 நூற்பாக்களையும் 41 வரிகளையும் 216 சொற்களையும் 624 எழுத்துக்களையும் கொண்டது சிவஞானபோதம்” என்று கணக்கிட்டு ‘எண்ணித் துணிக கருமம்’ என்ற குறளுக்கு மற்றுமொரு பொருளாய் விளங்கியவர் மறைமலை அடிகளார். சைவப் பொருளாராய்ந்த இந்தப் பெரும்பயிற்சிதான் முல்லைப் பாட்டையும் எண்ணிக் கற்கும் எண்ணம் தந்தது. 103 அடிகளையும் 500 சொற்களையும் கொண்ட முல்லைப்பாட்டில் 9 மட்டுமே வடசொற்கள் 2 மட்டுமே திசைச்சொற்கள் என்று ஆராய்ந்து அறிவித்த அறிஞர் பெருமான், முல்லைப்பாட்டில் இரண்டே விழுக்காடுதான் பிறமொழிச்சொற்கள் என்று அறுதியிட்டு உறுதி செய்தார். ஆனால் 2810 முதன்மைச் சொற்கள் கொண்ட திருவாசகத்தில், 373 வடசொற்களை ஆராய்ந்துகண்ட அடிகளார், திருவாசகத்தில் 7 முதல் 8 விழுக்காட்டு வடசொற்கள் நின்று நிலைத்திருப்பதைக் கண்டு சொன்னார்.
தனித்தமிழ் எண்ணம் தலையெடுத்த பிறகு தாம் எழுதிய பழைய நூல்களிலும் அயன்மொழிச் சொற்களைக் களைய வேண்டுமென்று கட்டளையிட்டுக்கொண்டார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரையின் முதற் பதிப்புக்கும் நான்காம் பதிப்புக்கும் 28 ஆண்டுகால இடைவெளியிருந்தது. நான்காம் பதிப்பின் முகவுரையில் “முற்பதிப்புகளில் இடையிடையே விரவியிருந்த சிற்சில வடசொற்களையுங் களைந்தெடுத்து இவ்வுரை நடையைச் சாலவுந் தூய தனித்தமிழாக்கியிருக்கின்றோம்” என்று எழுதியவரின் ஊட்டம் உணர்தற்குரியது.
அதன்பின்னர் அவரது பேச்சு மடைமாற்றம் கண்டது; எழுத்து நடைமாற்றம் கொண்டது. இவ்விடத்தில் ஊன்றி உணரத்தக்கது ஒன்றுண்டு. தனித்தமிழ் காண வேண்டும் என்ற வெறியில் அவர் ஈரமற்ற இருண்மை மொழியில் எழுதினாரில்லை. கோழியடைக்கும் கூண்டுக்குள் யானையடைக்க முயன்றாற்போல் பொருந்தாத மொழியில் தம் புலமையைத் திணித்தாரில்லை.
நேற்றுப் புதிதாய் வாங்கிய பொன் நகைகளை ஊர்காண வேண்டுமென்று, பொழுது விடிந்ததும் இழவு வீட்டுக்கு அணிந்து செல்லும் ஒரு பணக்காரப் பாவையைப்போல் தனித்தமிழ் நடை சிலவிடங்களில் பொருந்தாமற் போய்விடுகிறது. தனித்தமிழ்ப் பேரார்வத்தால் தன் பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்ட வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் சென்னை தங்க சாலையில் நிகழும் ஒரு காதற்காட்சியை இப்படிக் கட்டுரைக்கிறார் :
“அவ்வீட்டின் மாடத்தும்பர், ஓர் அறையின் கண்ணே, இன்னிசைப் பாட்டும் மன்னிசைக் கல்வியும் வல்லளாய் எழிலும் குணமுமியைந்த பூங்கொம்பராய் மிளிர்தரும் ஓர் இளம் பருவப்பெண் தனது வார்குழல் கோதி முடித்துக்கொண்டு நின்றாள். அப் போழ்தத்துக் கரிய மாலனைய காளையொருவன் விரைந்து அவட்குப் பின்புறம் போந்து, அவடன் விழிகளிரண்டையும் தன்னிரு கையாலிருகப் புதைத்துக்கொண்டு நின்றான். அன்னணம் ஒருவன் கண்புதைத்ததுணர்ந்த அந்நங்கை, ‘விடுதி விடுதி விடுதி’ என்று மெல்லெனக் கூயினள். அதற்கவன் ‘இதுவே நந்தமக்கேற்ற நல்ல விடுதி’ என்று கூறி நகைத்தனன். அவள் சிறிது விலகிக்கொண்டு நின்று, ‘நீ யென்னைத் தவிர்த்து வேறெம் மங்கையையுங் கனவிலும் விழையேன் என்று வாய்மொழி கூறினாலன்றி, நீயென் கூந்தலைத் தொடற்பாலையல்லை என்றாள்’”.
இந்த எழுத்தோவியத்தில் சொற்களெல்லாம் தனித்தமிழ்ச் சொற்களே. நடையும் மேம்பட்டதே. ஆனால் மொழி, ஓசையோடு நடைபெறுகிறதன்றி உணர்ச்சியோடு ஒட்டவில்லை. இது ஒரு நெகிழிக்கனி (Plastic Fruit). பார்க்க அழகு; ஆனால் பசிக்குதவாது. மறைமலையடிகள் நடையோ தனித்தமிழை உள்வாங்கி உயிர்ப்போடு நடைபெறும் உணர்ச்சிநடை. புலமையைப் பின்னிறுத்திக் கருத்தை முன்னிறுத்தும் கலைநடை.
“சாதி வேற்றுமை என்னும் கொடிய தூக்குக் கயிறானது காதல் அன்பின் கழுத்தை இறுக்கிவிட்டது. எந்தப் பெண் மகளாவது தான் காதலித்த இளைஞனை மணங்கூட இடம் பெறுகின்றனரா? எள்ளளவும் இல்லையே ஏன்? அவள் கயல்மீனை ஒத்த கண்ணழகியாக இருந்தாலென்ன? கண் குருடான ஒருவனைத் தவிர வேறு மணமகன் தன் இனத்தில் கிடைத்திலனாயின் அவள் அவனையே தான் மணந்து தீரல் வேண்டும். அவள் முத்துக் கோத்தாலன்ன பல்லழகியாய் இருந்தாலென்ன? தம் பாழும் இனத்தில் ஒரு பொக்கை வாய்க்கிழவனைத் தவிர வேறு மணமகன் கிடைத்திலனாயின் அவள் அவனையே தான் மணந்து தீரல் வேண்டும்”.
சுடர்கொண்ட சொல்லும் – உயிரள்ளும் பொருளும் – உணர்ச்சியும் - உண்மையும் கூடிக் கும்மியடிக்கும் இந்தக் கொழுந்தமிழ் நடை தமிழ்நாட்டு அரசியலையே புரட்டிப்போட்ட ஒரு புரட்சிக்கு வித்திட்டது. அடிகளாரின் எழுத்து புலவர்களுக்கு மட்டுமன்று - தலைவர்களுக்கும் ஒரு கோட்பாட்டுப் பொருளானது.
மறைமலையடிகள் ஊதியத்திற்கு எழுதிய பிழைப்பெழுத்தாளர் அல்லர்; எழுதியே பிழைக்கும் காலமும் அதுவன்று. “பட்டினப்பாலை ஆராய்ச்சியின் முதற்பதிப்பு முதன் முதல் 1906ஆம் ஆண்டு வெளிவந்தது; அப்போது அதில் 250 படிகளே பதிப்பிடப்பட்டன. அவ்விருநூற்றைம்பது படிகளுஞ் செலவாகப் பதின்மூன்றாண்டுகள் சென்றன” என்று அவர் எழுதுகிறபோது அச்சோ என்று எரிகிறது அடிவயிறு.
தமிழ் ஆட்சி பெறவும் தமிழர் மீட்சி பெறவுமே அவர் எழுத்தும் பேச்சும் மூச்சுள்ளவரை இயங்கின என்று உணரமுடிகிறது.
தண்ணீரைத் தேடிப் பயணித்த கடப்பாரை புதையலில் முட்டிப் பொறி தட்டியதுபோல, மொழி மீட்சிக்குத் தோன்றிய தனித்தமிழ் இயக்கம் இனமீட்சியில்போய் முடிந்தது.
திராவிட இயக்கத்தைக் கொழுந்துவிட்டு எரியச் செய்த கொள்கைகளுள் ஒருபாதி இனம்; மறுபாதி மொழி. அந்த மொழிக்கொள்கை மறைமலையடிகளின் மூளைக் குழந்தை என்பதை மறைக்கவோ மறுக்கவோ இயலாது. ஒருவரைப் பாராட்டுவதில் பணத்தைவிடச் சிக்கனமாய்ச் சொற்களைப் பயன்படுத்துகிற பெரியார் மறைமலை யடிகளைத் தன் கரமென்று சொல்லியிருக்கிறார்.
“மறைமலை யடிகளும் எம்.எல்.பிள்ளையும் எனக்கு வலக்கையும் இடக்கையும் போன்றவர்கள். எனக்குப் பகுத்தறிவுப் பாதையில் ஏதேனும் அய்யம் உண்டாகும் போதெல்லாம் அவர்களிடமே தீர்த்துக்கொள்வேன்”. பெரியாரின் இந்தக் கூற்றை நான் பெரிதினும் பெரிதாய்க் கருதுகிறேன்.
தனித்தமிழ் என்ற கருத்தியலைக் கண்டறிந்ததோடு நின்றிருந்தால் மறைமலையடிகளுக்கு இந்த மாண்பு இருந்திருக்காது. தம் செம்மாந்த புலமையால் அதைச் செயற்படுத்தி நிறுவனமாக்கி நிலைப்படுத்தியதே அவரது மாட்சிக்குச் சாட்சி. அவர் பெற்றிருந்த மும்மொழிப் புலமை என்ற பெருந்தகுதி அவர்கொண்ட கொள்கையை அறிவியல் அடிப்படையில் நிறுவி முடிக்கப் பெருந்துணை புரிந்தது.
ஒரு மொழியை ஊடறுத்துப் பிறமொழிச் சொற்கள் உள்நுழைவது எதனால் நேர்கிறது? ஓர் இனத்தார் தம் மொழிவெளி கடந்து பிறவெளி புகுந்தாலும், பிறமொழி பேசுவார் தம்வெளி கழிந்து உள் நுழைந்தாலும் பண்பாட்டு வணிகப் பரிமாற்றங்கள் எவ்வழியில் நிகழ்ந்தாலும் ஒரு மொழி பிறமொழியை உள்வாங்கியே தீரும். ஆனால் அதன் விழுக்காடு எவ்வளவு - விளைவுகள் என்னென்ன என்பதையே ஒரு மொழி வல்லான் கருதுவான்; கவலைகொள்வான்.
மாற்றம் தானே மானுடக் கோட்பாடு. மொழியும் ஓர் உயிரிதானே! ஆதலால் அதுவும் மாறித்தானே ஆக வேண்டும். பிறமொழிக் கலப்பு என்பது பண்பாடுகள் நெருங்கிவரும் நிகழ்வுதானே. உலகம் உருண்டையாகவும் உலகப் பண்பாடு தட்டையாகவும் விளங்கும் மானுடச் சூழலில் பிறமொழிக் கலப்பால் ஒருமொழி செழுமையுறும்தானே என்று எதிர்மறைச் சிந்தனைகளை உண்மைபோல் தோற்றுவிப்பார் சில உரை வல்லார். இந்தத் தவறான கருத்தை உடைத்தெறிய வேண்டும்; அதற்கு தருக்க அறிவு வேண்டும். கொண்ட கொள்கையை நிறுவத்தக்க தருக்க அறிவு வாய்க்கப்பெறாததால் தமிழர்கள் தங்கள் நீண்ட வரலாற்றில் நிறைய இழந்திருக்கிறார்கள்.
மறைமலையடிகளார் தமிழுக்கு வாய்த்த ஒரு தருக்கப் பேரறிஞர். ‘தனித்தமிழ் மாட்சி’ என்னும் கட்டுரையில் அவர் எழுதுகிறார் :
“மாறுதல் என்னுஞ் சொல்லால் உணர்த்தப்படும் பொருள் என்னை? ஒன்று தன் றன்மை திரிந்து மற்றொன்று ஆதலா? அல்லது அது தன் இயல்புக்கு ஏலாதவற்றொடு கலக்கப்பெற்றுத் தன்நிலை குலைதலா? அல்லது தன்னிலைக்கு ஏற்றவாறு பிறவற்றின் உதவியால் தானே வரவர வளர்ந்து திரிபுறுதலா? எனின், இம் மூன்றும் அம்மாறுதல் என்னுஞ் சொல்லுக்குப் பொருளேயாம்.
முதலிற் சொன்ன பொருளின் படி, தவளையினத்திற் சேர்ந்த சில சிற்றுயிர்களும் பட்டுப்பூச்சி முதலியனவும் முதலில் ஒருவகை யுருவத்திலிருந்து, பிறகு அவ்வுரு முழுதுந் திரிந்து தவளையாகவும் பட்டுப் பூச்சி முதலியனவாகவும் மாறுகின்றன; இரண்டாவது சொன்ன பொருளின்படி, மக்கள் முதலான எத்தகைய உயிர்களுந் தம்முடம்பின் இயல்புக்கு ஏலாத நோய்ப் புழுக்களோடும் பாம்பின் நஞ்சையொத்த நச்சுப் பொருள்களோடுங் கலக்கப் பெறுமானால் தம்முடம்பின்நிலை குலைந்து மாறி விரைவில் அழிந்துபோகின்றன; இனி, மூன்றாவது சொன்ன பொருளின்படி, உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுந் தத்தம் நிலைக்கு ஒத்த பொருள்களின் சேர்க்கையால் தமது நிலை கெடாமலே வளர்ந்து திரிபெய்தி வருகின்றன.
தம் நிலைகுலைந்து மாறுதலாகிய வேண்டாத தொன்றைக் கடைப்பிடியாய்ப் பிடித்துக்கொண்டு, அதன்படி நமது அருமைச் செந்தமிழ்மொழியுந் தனது தூயநிலை குலைந்து மாறுதல் அடைய வேண்டுமென்று உரைப்பது அறிவுடையோரால் ஏற்றுக்கோடற் பாலதாமோ?”
தவிர்க்க முடியாத இந்தத் தருக்கம் தமிழ்ப் பகைவர்களைக் கட்டிப்போட்டது.
பல்வேறு தமிழ் ஆளுமைகளின் கூட்டுக்கலவை மறைமலையடிகளார். “பரிமேலழகரின் மொழியொழுங்கும், நக்கீரரின் தருக்கச் செறிவும், சேனாவரையரின் திட்ப நுட்பமும், சிவஞானமுனிவரின் மறுப்புரை மாட்சியும், கூடிக் கலந்து கொழித்த மொழியே மறைமலையாரின் உரைநடையாகும்” என்று அறிஞர் கூட்டம் அறுதியிடுகிறது.
பெய்த பெருமழையின் பேரீரம் வெவ்வேறு தாவரங்களில் காலங்கடந்தும் காட்சிப்படுவதுபோல் மறைமலையடிகள் அன்று கொளுத்திப்போட்ட நெருப்புதான் இன்றளவும் வெவ்வேறு திரிகளில் விளக்குகளாய் விளக்கமுற நிற்கிறது.
முதலில் அது ஊடக மொழியை உருமாற்றிப்போட்டது. சில ஏடுகள் ‘ஜல சப்ளை ரத்து’ என்று தலைப்பிட்டுக்கொண்டிருந்தன. இதனுள் ஜலம் - சமஸ்கிருதம்;
சப்ளை - ஆங்கிலம்; ரத்து - உருது. இது ‘தண்ணீர் வரத்து நிறுத்தம்’ என்று தமிழாகியது மறைமலையடிகளால்.
திராவிட இயக்க மேடைகளும் மறைமலையடிகளின் தாக்கத்தால் ஆக்கமுற்றன. ‘அக்ராசனர்’ தலைவரானார்; ‘மகாஜனங்கள்’ பொதுமக்கள் ஆயினர்; ‘பிரேரணை’ தீர்மானமாயிற்று; ‘நமஸ்காரம்’ வணக்கமாயிற்று. மாநில அலுவல் மொழியாகத் தமிழாவதற்கு ஒரே வழி ஆங்கிலத்தை எழுப்பிவிட்டுத் தமிழ் ஏறி அமர்வதுதான். ‘முனிசிபாலிட்டி’ நகராட்சி ஆயிற்று; ‘கார்ப்பரேஷன்’ மாநகராட்சி ஆயிற்று; ‘கமிஷனர்’ ஆணையாளரானார்; ‘ஜி.ஓ’ அரசாணையானது; ‘சர்குலர்’ சுற்றறிக்கை ஆனது. மறைமலையடிகளின் நீண்டு விழுந்த நிழல்களே இவையெல்லாம்.
அறிஞர் அண்ணா இந்த மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியதும், தமிழ் நாட்டுத் தலைநகரத்திற்குக் கலைஞர் ‘சென்னை’ என்று பெயர் சூட்டியதும் மறைமலையடிகளால் நேர்ந்த மங்கலங்களாகும்.
மாறிவரும் உலகச் சூழலில் முற்றிலும் தனித்தமிழால் இயங்கவியலாது என்பதையும் அடிகளார் அறிவார். அதற்கு ஒரு புறனடையும் வழங்கியிருக்கிறார்.
“இன்றியமையா இடங்களில் வடசொற்கள் சிலவற்றை எடுத்தாளுதல் வழுவென்று யாங் கூறவில்லை. பொருள்களைக் குறிப்பிடுவதற்கு ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருக்கையில் அவற்றை விடுத்துப் பிறவற்றைப் புகுத்தலையே பெரியதொரு குற்றமாக நினைக்கின்றோம்” என்று ‘தனித்தமிழ் மாட்சி’யில் எழுதுகிற அடிகளார் தாம் உள்ளூர்த் தமிழர் மட்டுமல்லர்; உலக மானுடன் என்பதை உறுதி செய்கிறார்.
மறைமலையடிகளின் தேவை இன்னும் தீர்ந்துவிடவில்லை. உலகமயமாதல் என்ற ஊழி அலை உலகத்தின் கரைகளிலெல்லாம் விசிறியடிக்கும் இந்த வேளையில்தான் தூணைப்போல் தேவைப்படுகிறது மறைமலையடிகள் துணை.
தனித்தமிழ் இயக்கத்தின் ஊற்றுக்கண்களைத் தமிழர்கள் காலந்தோறும் காத்துவர வேண்டும்.
தமிழ்மொழியின் பெயர்ச் சொற்களெல்லாம் தமிழ்தானா என்ற வினாவுக்கு முன்னால், தமிழின மாந்தர்களின் பெயர்களெல்லாம் தமிழ்தானா என்று ஓர் எரியும் வினாவோடு நம்மை எதிர்கொள்கிறது நிகழ்காலம். தமிழ்நாட்டு உழைக்கும் மக்களே தம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டி வழி வழியாக வழங்கினார்கள். திராவிட இயக்க எழுச்சியில் தனித்தமிழ்ப் பெயர்கள் வீடுகள்தோறும் விளங்கின. தற்காலத்தில் பொருளறியா ஓசைகளும் கிரந்த எழுத்துக்களின்றி இயங்கமுடியாத ஒலிக்கூட்டமும் தமிழர்களின் பெயர்களாகத் துலங்கத் தொடங்கியிருப்பது இன வரலாற்றுக்கு எதிர்மறையாகும். ஒலியும் பொருளும் அழகும் கொண்ட நற்றமிழ்ப் பெயர்களை நாடுதோறும் விதைக்க வேண்டும்.
அனிச்சம், ஆதிரை, இன்பா, ஈழச்செல்வி, எழிலி, ஏந்திழை, உறங்காமலர், ஊஞ்சல்நிலா, ஐம்பொன், ஒண்டொடி, ஓவியா என்பன போன்று பெண்பாற் பிள்ளைகளுக்கும், அன்பன், ஆதவன், இனியன், ஈழவன், என்னவன், ஏரழகன், உறங்காப்புலி, ஊரன், ஐயன், ஒப்பிலான், ஓவியன் என்பன போன்று ஆண்பாற் பிள்ளைகளுக்கும் பெயர் சூட்டினால் நாளடைவில் அந்த ஓசைமீதே நமக்கு ஆசைவரும்.
உலகச் சந்தையை வென்றெடுக்க வேண்டுமென்ற வேட்கையில் உள்ளூர் அடையாளங்களைத் தொலைத்துவிடக் கூடாது. முத்துக்குளிக்கும் அவசரத்தில் மூச்சை இழந்துவிடக் கூடாதல்லவா?
தமிழர்கள் அனைவரும் தமிழ்ப்பெயர் சூடிக்கொண்டால், பள்ளி கல்லூரி ஆவணங்களில் – அடையாள அட்டைகளில் – குடும்பக் கோப்புகளில் – வங்கிகளில் – அரசு – தனியார் அலுவலகங்களில் - நீதிமன்றங்களில் – காவல் நிலையங்களில் – ஊடகங்களில் – பயணங்களில் - உலகவழக்கில் எட்டுக்கோடித் தமிழ்ப்பெயர்கள் எல்லா நாட்களிலும் புழங்கப்பெறும். அந்த எட்டுக்கோடிப் பெயர்ச் சொற்களின்மீது ஒரு மொழி தன்னை ஊன்றி நடக்கும் உறுதிகிட்டும்.
தமிழர்காள்! இப்போது துலங்கும் பெயர்கள் இப்படியே துலங்கட்டும்; இனிவரும் தலைமுறைகளுக்குத் தமிழ்ப் பெயர்களே விளங்கட்டும்.
மீண்டும் இயற்கைக்குத் திரும்ப வேண்டும் என்று சுற்றுச்சூழல் சொல்கிறது. மீண்டும் கூட்டுக்குடும்பத்திற்குத் திரும்ப வேண்டுமென்று மானுடவியல் பரிந்துரைக்கிறது. தாய்மொழிக் கல்விக்கே திரும்பவேண்டுமென்று உலகக் கல்விக்கொள்கை உரக்கக் கூவுகிறது.
நாமும் திரும்ப வேண்டும். மறைமலைகள் மீண்டும் வேதாசலங்களுக்குத் திரும்ப வேண்டாம்; வேதாசலங்கள் மறைமலைகளுக்குத் திரும்பட்டும்.

ஆண்டு வரிசைப்படி த

Friday, December 15, 2017

பிஎஸ்என்எல் நிறுவனம் காக்க வேலைநிறுத்தம்



நன்றி தீக்கதிர்
பிஎஸ்என்எல் நிறுவனம் காக்க வேலைநிறுத்தம்
ஏ.பாபு ராதாகிருஷ்ணன்(#BSNLEU மாநில பொதுசெயலர்)
இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் உலகத் தரம் வாய்ந்த தொலைத் தொடர்பு சேவைகளை வழங்குவது என்ற பெயரால் அரசுத்துறை நிறுவனமாக இருந்ததை 01.10.2000 முதல் பிஎஸ்என்எல் என்ற பொதுத்துறை நிறுவனமாக ஆட்சியாளர்கள் மாற்றினார்கள். இதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் அள்ளித்தருவோம் என வாக்குறுதிகளை கொடுத்தனர்.
ஆனால் ஆரம்ப நாள் முதலே இந்த நிறுவனத்தை சீரழிக்க முயற்சி செய்தனர். நவீன தொழில்நுட்ப சேவையான மொபைல் சேவையினை தனியார் நிறுவனங்கள் எல்லாம் கொடுக்க ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் கழித்த பின்னரே பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர்தான் அந்த வாய்ப்புக் கூட வழங்கப்பட்டது.
தடுக்கப்பட்ட வளர்ச்சி
மொபைல் சேவை வழங்க ஆரம்பித்து ஐந்தாண்டு காலத்திற்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் பல தனியார் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி மொபைல் சேவையில் இரண்டாம் இடத்திற்கு வந்தது. இன்னமும் ஒரு ஆண்டு காலம் இதே வேகத்தில் சென்றால் முதலிடத்திற்கு வந்துவிடுவதற்கான வாய்ப்பு இருந்தது. பொதுத்துறை நிறுவனத்தின் மீது இந்திய நாட்டு மக்களுக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாகவும், சிறப்பான சேவையின் காரணமாகவும் இந்த நிலை உருவானது.
ஆனால் இந்த நேரத்தில் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் 2007ஆம் ஆண்டு தனது விரிவாக்கத்திற்காக இறுதி செய்யப்பட்டிருந்த 4.5 கோடி கருவிகளுக்கான டெண்டரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரத்து செய்தார். சேவையின் விரிவாக்கம் தடுக்கப்பட்டது. பின்னர் 9.3 கோடி கருவிகள் வாங்குவதற்காக டெண்டர் இறுதி செய்யப்பட இருந்த நேரத்தில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அதனையும் ரத்து செய்தது. ஒரு ஆறாண்டு காலத்திற்கு மேல் கருவிகளின் பற்றாக்குறையின் காரணத்தால் ஒட்டு மொத்தமாக பிஎஸ்என்எல்-லின் வளர்ச்சி முடக்கப்பட்டது.
கருவிகளின் பற்றாக்குறையின் காரணமாக வளர்ச்சி பாதிக்கப்பட்டதோடு சேவையின் தரத்திலும் குறைபாடு ஏற்பட்டது. 2007ஆம் ஆண்டு வரை நாளொன்றுக்கு பல கோடி ரூபாய்களை லாபமீட்டி வந்த பிஎஸ்என்எல் நிறுவனம் அதற்கு பின் மெல்ல மெல்ல தேய ஆரம்பித்தது.
அரசின் சமூக கடமைகளுக்காக
அரசாங்கத்தின் சமூக கடமைகள் அமலாக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு இருந்தது. ஒரு புறம் லாபம் தரும் நகரப் பகுதிகளிலும், பெருநகர பகுதிகளிலும் மட்டுமே தனியார் நிறுவனங்கள் தங்களது அக்கறையான சேவையை வழங்கி வந்த நிலையில் தொலை தூர கிராமப்புறங்கள், மலைப் பகுதிகள், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் இருந்த மக்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் சேவையினை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கியது. அரசாங்கத்தின் சமூக கடமைகளை நிறைவேற்றுவதற்காக இந்த பொதுத்துறை நிறுவனம் அதனால் ஏற்படும் நஷ்டத்தை கணக்கில் கொள்ளாமல் சேவையினை வழங்கி வருகிறது. இந்த நஷ்டத்தினை இதுவரை அரசாங்கம் ஈடுகட்டவே இல்லை.
சிறந்த சேவை தர
களமிறங்கிய ஊழியர்கள்
இந்த நேரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை காக்கும் பொறுப்பினை இதில் பணியாற்றும் அதிகாரிகளும், ஊழியர்களும் ஏற்றுக் கொண்டனர். கடந்த சில ஆண்டுகளாக “வாடிக்கையாளர் மகிழ்விப்பு இயக்கம்”, “புன்முறுவலுடன் சேவை” போன்ற இயக்கங்களை பிஎஸ்என்எல்-லில் பணியாற்றும் ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்தி சேவையினை மேம்படுத்தினர். 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி முதற்கொண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை தனது பணி நேரத்திற்கு மேல் ஒரு மணி நேரம் கூடுதல் பணி செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலை தலைமேல் கொண்டு அதிகாரிகளும் ஊழியர்களும் இரவு, பகல் பார்க்காமல் கூடுதலாக பணியாற்றினார்கள்.
பிஎஸ்என்எல்-லின் புத்தாக்கம்
ஒரு சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வந்த பிஎஸ்என்எல் நிறுவனம் தொழிற்சங்கங்களின் இந்த முயற்சியின் காரணமாக மீண்டு வர துவங்கியது. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கடுமையான முயற்சிகளின் காரணமாக 2014-15ஆம் ஆண்டுகளில் இருந்து செயல்பாட்டு லாபத்தை பெற துவங்கியது. தேய்மான செலவுகள் என 7,000 முதல் 8,000 கோடி ரூபாய்களென நிர்ணயிக்கப்பட்டதின் காரணமாகவே நிகர லாபத்தை அடைய முடியாமல் இருந்தது. மத்திய அரசாங்கம் கொண்டு வந்த பண மதிப்பின்மை காரணமாகவும், மோசடித்தனம் நிறைந்த ரிலையன்ஸ் ஜியோவின் வருகையின் காரணமாகவும், கடந்த நிதியாண்டில் தனியார் நிறுவனங்களின் வருவாய் 30 முதல் 40 சதவிகிதம் குறைந்த நிலையிலும், பிஎஸ்என்எல்-ன் வருவாய் குறையவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
ஊதிய மாற்றம்
இந்த சூழ்நிலையில் பிஎஸ்என்எல்-லில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிக நீண்ட பத்தாண்டு காலத்திற்கு பின் வரவேண்டிய ஊதிய மாற்றத்தை மத்திய அரசு லாபமில்லை என்று சொல்லி மறுத்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இயக்குநர் குழு இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் 15 சதவிகித ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய ஊதிய மாற்றம் தரலாம் என்றும், அதற்காக அரசாங்கம் எந்த ஒரு நிதியும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தரவேண்டியதில்லை என்றும் தெளிவாக கூறியுள்ளது. பிஎஸ்என்எல்-லின் சொந்த நிதியிலிருந்தே இவர்களுக்கு ஊதிய மாற்றம் தர முடியும் என்று அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவே கூறிய பின்னரும் அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 1.85 லட்சம் ஊழியர்களில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் அரசுத்துறை ஊழியர்களாக பணியில் நுழைந்து அரசின் கொள்கை முடிவின் காரணமாக இன்று பொதுத்துறை ஊழியர்களாக மாறியுள்ளனர். இந்த நிறுவனத்தை பல மட்டங்களில் தலைமை தாங்கும் அதிகாரிகளில் பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைய தயாரில்லை என்று கூறி அரசு ஊழியர்களாகவே தொடர்கின்றனர். அவர்களுக்கு மத்திய அரசின் 7வது ஊதியக் குழு பரிந்துரைகள் முழுமையாக அமலாக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் மறுப்பது நியாயமில்லை என அந்த ஊழியர்களும், அதிகாரிகளும் கொந்தளிப்பில் உள்ளனர்.
அரசு மறுப்பதற்கான காரணம்
பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கப்பட்டு 17 ஆண்டுகள் கழித்த பின்னரும் இந்த பொதுத்துறை நிறுவனத்தை சீரழிக்க அரசுகள் எடுத்து வந்த அனைத்து முயற்சிகளையும் ஊழியர்களும், அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து பல்வேறு போராட்டங்கள் மற்றும் இயக்கங்களை நடத்தி தடுத்து இந்த நிறுவனத்தை பொது மக்களுக்கு பயன்தரும் நிறுவனமாக நிலைநிறுத்தி வருகின்றனர். எனவே அதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் மன நிலையை சீர்குலைக்கவே அரசாங்கம் அவர்களுக்கான ஊதிய மாற்றத்தை மறுத்து வருகிறது.
துணை டவர் நிறுவனம்
மொபைல் சேவையின் வளர்ச்சிக்கு அதிமுக்கிய காரணம் அதன் மொபைல் டவர்கள் என்பது அனைவரும் தெரிந்ததே. நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ள 66,000க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து தனியாக பிரித்தெடுத்து ஒரு துணை டவர் நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அதில் பணியாற்றுவதற்கான ஊழியர்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்தே எடுக்கப்படும் என்றும் அதனை பராமரிப்பதும் பிஎஸ்என்எல்-தான் என்றும் அரசாங்கம் கூறுகிறது. பின்னர் எதற்காக அதனை தனியான ஒரு நிறுவனமாக மாற்ற வேண்டும்? புத்தாக்கத்தை நோக்கி திரும்பியுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தை நலிவடைய செய்வதற்கான முயற்சியே தவிர வேறு ஏதும் இல்லை. மொபைல் டவர்களை தனியாக பிரித்த பின்னர் பிஎஸ்என்எல்லின் புத்தாக்கம் ஒட்டுமொத்தமாக தடைபடும். பின்னர் நலிவடைந்த நிறுவனம் என்ற பெயரைச் சொல்லி இந்த நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
பிஎஸ்என்எல் இல்லையெனில்...
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இல்லையெனில் தனியார் நிறுவனங்கள் தங்கள் இஷ்டப்படி தொலைத்தொடர்பு கட்டணங்களை நிர்ணயிப்பார்கள். ஏதோ கற்பனையில் உருவான வாதம் இது இல்லை. 2002ஆம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் மொபைல் சேவை தரத்துவங்கும் வரை தனியார் நிறுவனங்கள் சந்தாதாரர்களிடம் எப்படி எல்லாம் கொள்ளையடித்தார்கள். தாங்கள் அழைக்கும் அழைப்புகளுக்கு 16 ரூபாய்களையும் தங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு 8 ரூபாய் வரையும் கட்டணமாக வசூலித்தார்கள் என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் சேவை வழங்க துவங்கும் போதே தங்களுக்கு வரும் அழைப்புகளுக்கான கட்டணம் ஏதுமில்லை என அறிவித்த பின்னரே அவர்களும் அந்த நிலைக்கு வந்தார்கள். தாங்கள் அழைக்கும் அழைப்புகளுக்குமான கட்டணங்களும் கடுமையாக குறைந்துள்ளது. தற்போதும் பிஎஸ்என்எல் நிறுவனம் தான் குறைந்த கட்டணத்தில் அனைத்து சேவைகளையும் கொடுத்து வருகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்த பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இல்லையெனில் இன்றைக்கு மொபைல் சேவைக்கு முழுமையாக பழகி விட்ட வாடிக்கையாளர்கள் தனியாரின் கொள்ளை லாப வேட்டைக்கு பலியாவார்கள் என்கின்ற கடுமையான அபாயம் உள்ளது.
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 01.01.2017 முதல் ஊதிய மாற்றம் வழங்க வேண்டும் மற்றும் பிஎஸ்என்எல் என்கின்ற பொதுமக்களுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனத்தை சீரழிக்க செய்யும் துணை டவர் நிறுவனம் உருவாக்கம் என்பதை கைவிட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபர் 11ஆம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
மேலும் நவம்பர் 23ஆம் தேதி இந்திய நாட்டின் மாவட்ட தலைநகர்களில் மனித சங்கிலி இயக்கத்தையும் லட்சக்கணக்கான ஊழியர்களைக் கொண்டு வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு கொடுக்கும் இயக்கத்தையும் நடத்தியுள்ளனர். இவற்றிற்கு பின்னரும் பிஎஸ்என்எல் ஊழியர்களின் இந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் அதிகாரிகளும் ஊழியர்களும் ஒன்றாக இணைந்து டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசாங்கம் இவர்களின் கோரிக்கைகளை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லையெனில் காலவரையற்ற வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
கட்டுரையாளர்: தமிழ் மாநில செயலாளர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்

Tuesday, July 18, 2017

Monday, July 3, 2017

முதலில் இந்தித் திணிப்பு; அடுத்து சமஸ்கிருதம்!

தீக்கதிர் கட்டுரை



இந்தித் திணிப்பு என்பது தற்காலிகமானது. சமஸ்கிருதத்தை தேசிய மொழியாகவும், நாட்டின் அலுவல்மொழியாகவும் ஆக்கி சட்டமியற்றுவதன் மூலம் இந்தி உட்பட இதர மொழிகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளுவதே சங்பரிவாரின் உண்மையான நோக்கமாகும்.

இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரைமத்திய அரசின் அனைத்து அலுவல்களுக்கும் நாடாளுமன்ற அலுவலுக்கும்ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை கட்டாயமாக்கும் வகையில் இந்தமசோதா திருத்தப்பட வேண்டும். மொழிக்கொள்கைகளை மாற்றுவதற்கு விதி உருவாக்கும் எந்த அதிகாரமும் (மத்திய) அரசாங்கத்திற்கு இருக்கக் கூடாது’ (சிபிஎம் அரசியல்தலைமைக்குழு தீர்மானம் 1968)மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சுமார் அரை நூற்றாண்டிற்கு முன்னர் நிறைவேற்றிய தீர்மானம் இது. ‘மொழிக்கொள்கையில் மாற்றம் செய்யும் எந்த அதிகாரமும் (மத்திய) அரசிற்கு இருக்கக்கூடாது’ என்ற வாசகத்தை புரிந்து கொள்ளும்எவருக்கும் இது மிகக் கடுமையானதாக தோன்றக் கூடும். ஆனால் அரைநூற்றாண்டு கழிந்த பிறகு இந்த தீர்மானத்தின் வாசகம்இன்று, இன்னும் கூடுதல் பொருத்தப்பாட்டுடன் விளங்குவது மகிழ்ச்சிக்கு உரியது அல்ல.இப்பிரச்சனை வெறும் மொழிப்பிரச்சனை மட்டுமல்ல. ‘மொழிப் பிரச்சனைக்குப் பின்னே ஆழமாகப் புதைந்து கிடப்பது இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் பிரச்சனை.
இந்தியா ஒரே ஒரு தேசிய இன அரசு அல்ல;மாறாக பல தேசிய இனங்களைக் கொண்டுள்ளஅரசு அமைப்பிது. இந்த உண்மையை மறுத்துமொழிப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. (தோழர் பி.ஆர்.ராமமூர்த்தி 1968 - மொழிப் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிலை)எனவே தான், தேசிய இனப்பிரச்சனையாக இருப்பதால் தான் விடுதலைப் போராட்டக் காலத்தில் - அப்போது இந்தியாவின் எந்தவொரு தேசிய இனமும் இன்னொரு தேசியஇனத்தை அடக்கியாளும் நிலை இல்லை என்ற போதும் - அனைத்து தேசிய இனங்களும் ஆங்கில காலனி ஆதிக்கத்தால் அடக்கியாளப்பட்ட போதும் - மொழி பிரச்சனையில் இந்திய விடுதலை இயக்கம் குறிப்பாக காங்கிரஸ் கட்சி எச்சரிக்கையுடன் நடந்து கொண்டது.விடுதலைக்கு முன்னர் அது மொழிவாரி மாநிலக் கோரிக்கை, நீதி, நிர்வாகம், மாநில மொழிகளில் நடப்பது, உயர் கல்வி வரை மாநில மொழி அல்லது ஆங்கில மொழி, பிரிட்டிஷ் நிர்வாக ஏற்பாட்டின்படி அல்லாமல் மொழிவாரி மாநில அமைப்புகள் என்பதையெல்லாம் முன்வைத்தது. ஆனால் விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலக் கோரிக்கையைக் கூட அது ஏற்க மறுத்தது. போராட்டங்கள், இயக்கங்கள், துப்பாக்கிச் சூடுகள், மரணங்கள் இனியும் தாமதிக்க முடியாது என்கிறநிலையில் தான் விடுதலைக்குப் பின் 20 ஆண்டுகள் கழித்துத்தான் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. எனவே தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை மொழிப்பிரச்சனை என்று மட்டும் கருதாமல் இதுதேசிய இனப் பிரச்சனையின் ஒரு பகுதியெனப் பார்த்தது; பார்க்கிறது.அரசியல் நிர்ணய சபையில் 1946ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று பேசிய ஆர்.வி. துலேக்கர் என்ற உறுப்பினர் ‘இந்துஸ்தானி தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்கஉரிமை கிடையாது. இந்திய அரசியலமைப்பை உருவாக்க இந்த அவையில் இருப்பவர்கள் இந்துஸ்தானி தெரியாதவர்கள் என்றால் அவையில் உறுப்பினராக இருக்கத்தகுதியற்றவர்கள். அவர்கள் வெளியேறிவிடுவது நல்லது’ என்று பேசினார்.
இதேபோன்ற தொனியில் தான் பி.டி. தாண்டன், சேத்கோவிந்த் தாஸ், சம்பூர்ணானந்த, ரவிசங்கர் சுக்லா, கே.எம். முன்சி போன்றோரும் பேசினார்.இந்தி மொழியின் மீதான அவர்களின் கரிசனம் தவறல்ல; ஆனால் பிறமொழிகள் மீதான விஷம் தோய்ந்த வெறுப்புக்கள் நியாயமற்றவை. சமஸ்கிருதம் உலக மொழிகளின் தாய்மொழி என்று பேசியவர்களும் அப்போதிருந்தனர். இதன் தொடர்ச்சியும் பகுதியுமே தேசியமொழி மற்றும் அலுவல் மொழி குறித்த விவாதங்களும் பிரச்சனைகளும். இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக உள்ள மக்கள் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதால் இந்தி இந்தியாவின் தேசியமொழியாகவும் அலுவல் மொழியாகவும் இருக்க வேண்டும் என அரசியல் நிர்ணய சபையிலேயே வலியுறுத்தப்பட்டது. மிக நீண்ட விவாதங்கள் மற்றும் இழுபறிக்குப் பின்னர் அரசியல் சட்டத்தின் 17ஆவது பகுதியில் அலுவல் மொழி குறித்த பிரிவுகள் 343 முதல் 349 வரை சேர்க்கப்பட்டன. இவற்றின்படி:ட தேவநாகரி வரிவடிவ இந்தி அலுவல்மொழியாக இருக்கும்.ட 15 ஆண்டுகளுக்கு அதாவது 1965 ஜனவரி25 வரை ஆங்கிலமும் அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்படும் (சுருக்கமாக இந்தியும், ஆங்கிலமும் தவிர இதர இந்திய மொழிகள் மத்திய அரசின் அலுவல் மொழியாக இருக்க முடியாது.)ட 15 ஆண்டுகளுக்குப் பிறகும் தேவைப்பட்டால் சில துறைகளில் ஆங்கிலம் பயன்படுத்தப்படலாம். அதற்கு நாடாளுமன்றம் சட்டமியற்றலாம்.
1955 மற்றும் 1960ஆம் ஆண்டுகளில் ஆங்கிலத்தின் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் இந்திமொழி பயன்பாட்டை அதிகரிப்பது ஆகியவற்றினை கமிஷன் அமைத்து அந்த பரிந்துரைகளை நிறைவேற்றலாம்.ட மாநில அரசின் அலுவல் மொழிகளாக அந்த மாநிலத்தில் வழக்கிலிருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளையோ இந்தியையோ பயன்படுத்தலாம். அதற்கு மாநிலங்கள் சட்டமியற்றிக் கொள்ளலாம்.ட மத்திய அரசிற்கும், மாநில அரசுகளுக்கும் இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் கடிதப்போக்குவரத்துக்கள் மத்தியஅரசின் அலுவல் மொழியிலேயே இருக்கும். (அதாவது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இடையே கூட இந்தி தான் அலுவல்மொழியென்றால் இந்தியில் தான் கடிதங்கள் எழுதிக் கொள்ள வேண்டும்.)ட உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் மொழியாக ஆங்கிலம் நீடிக்கும்.ட நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மசோதாக்கள், அரசாணைகள் ஆகியவையும் ஆங்கிலத்திலேயே இருக்கும்.இவைதான் மத்திய அரசின் அலுவல் மொழி குறித்த அரசியல் சட்டப்பிரிவுகள். இந்நிலையில் 1965ஆம் ஆண்டு நெருங்கும்வேளையில் இப்பிரச்சனை பூதாகாரமாக வெடித்தது. இதையொட்டிதான் ஜவஹர்லால் நேரு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் ஆங்கிலமும் மத்திய அரசின் அலுவல்மொழியாக இருக்கும் என்ற உறுதிமொழியை அளித்தார். அதேபோன்று இந்திய அலுவல்மொழிச் சட்டம் 1963இல் இயற்றப்பட்டது. 1965க்குப் பிறகும் ஆங்கிலம் அலுவல்மொழியாக பயன்படுத்தப்படலாம் என்று அந்தச்சட்டம் கூறியது. இருப்பினும் 1965 ஜனவரியில் இப்பிரச்சனை குறித்து மக்களின் மனநிலை கொதிநிலைக்குப் போனது. முன்னர் நேருகொடுத்த வாக்குறுதியை இப்போது லால்பகதூர் சாஸ்திரி கொடுத்தார்.
1938இல் இந்தியைகட்டாயமாக்கிய ராஜாஜி கூட பின்னர் சட்டம்போதாது அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டுமென்று கோரினார். அந்த அளவிற்கு பிரச்சனையின் தீவிரம் இருந்தது. இருப்பினும் தொடர்ச்சியாக மத்திய அரசாங்கம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறது. இப்போதுபாரதிய ஜனதா கட்சி ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு அவர்களின் மொழிக்கொள்கையின் அடிப்படையில் இந்தியை தீவிரமாகதிணிப்பதற்கு அனைத்து வகையிலும் முயற்சித்து வருகிறார்கள். முன்பெல்லாம் மத்திய அரசின் ஆவணங்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் தனித்தனியாக இருப்பது வழக்கம். பாஜக ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு மத்திய நிதிநிலை அறிக்கையில் அடுத்தடுத்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் அச்சிடுவது வழக்கமாக்கப்பட்டுள்ளது. இதனுடைய தொடர்ச்சியாகத்தான் இந்தி மொழியை திணிக்கும் திட்டத்தை பாஜக கல்வித்துறை மூலமாகவும் தனது ஒவ்வொரு துறையின் மூலமாகவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.பாஜக என்கிற கட்சிக்கு தனி மொழிக் கொள்கை கிடையாது. ஆர்.எஸ்.எஸ்.சின் இரண்டாவது தலைவராக இருந்த மாதவ சதாசிவ கோல்வால்கரின் கருத்துக்களின் அடிப்படையிலேயே அவர்கள் ஒவ்வொரு கொள்கையையும் அமல்படுத்த முயற்சிக்கிறார்கள். மொழிக் கொள்கையை பொறுத்தமட்டில் கோல்வால்கர் கீழ்க்கண்டவாறு வரையறுக்கிறார்.‘அனைத்து மொழிகளும் அதன் உட்கூறுகளும் பல்வேறு மலர்களிலிருந்து வெளிப்படும் நறுமணம் போன்று தேசத்தின் செழுமையான கலாச்சாரத்தை பிரதிபலிப்பவையே. இந்த மொழிகள் அனைத்திற்கும் உத்வேகம் அளிப்பது மொழிகளின் ராணியான, மொழிகளின் கடவுளான சமஸ்கிருதமே.
அதன் செழுமை மற்றும் புனிதத்துடன் அதன் தொடர்பு ஆகியவற்றின் காரணமாக நமது தேசியவாழ்க்கையின் பொதுமொழியாக சமஸ்கிருதமே இருக்க முடியும். சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்வது கடினமானதல்ல. சமஸ்கிருதம் தான் இன்றைய நமது தேசிய வாழ்க்கையை இணைக்கும் முக்கியமான கூறுகளில் ஒன்று. துரதிர்ஷ்டவசமாக தற்போது அதுபொதுவாகப் பயன்படுத்துவதில்லை. அதோடுநமது ஆட்சியாளர்களுக்கு அதை வழக்கத்தில்கொண்டு வருவதற்கான தார்மீகப் பெருமையோ தைரியமோ கிடையாது. ........எனவே தேசிய வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் இணைக்கும் மொழியாக சமஸ்கிருதம் இடம்பெறுகிற வரை நாம் நடைமுறை சாத்தியம் கருதி இந்திக்கு ஒருவாய்ப்பளிக்கலாம்.
இயற்கையாகவே அனைத்து இந்திய மொழிகளைப் போலவேசமஸ்கிருதத்தில் இருந்து தான் இந்தி பிறந்திருக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம்போன்ற நவீன அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கும் இந்தி மொழி சமஸ்கிருதத்தையே சார்ந்திருக்கிறது.’எனவே இந்தித் திணிப்பு என்பது தற்காலிகமானது. சமஸ்கிருதத்தை தேசிய மொழியாகவும், நாட்டின் அலுவல்மொழியாகவும் ஆக்கி சட்டமியற்றுவதன் மூலம் இந்தி உட்பட இதர மொழிகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளுவதே சங்பரிவாரின் உண்மையான நோக்கமாகும். எனவே தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த கட்டுரையின் துவக்கத்தில்சொன்ன தீர்மானத்தை 1968ஆம் ஆண்டு நிறைவேற்றியது. மத்திய அரசை பொறுத்தவரையில் மொழி குறித்து எந்தவிதமான விதிகளும் இயற்றுவதற்கு அதிகாரம் இருக்கக்கூடாது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடாகும்.

Sunday, June 18, 2017

அன்புள்ள அப்பாவுக்கு











தான் பார்க்காத உலகத்தை தன் மகனாவது பார்க்கட்டும் என தன் தோழ்மீது சுமந்த……… தகப்பனை ,,,,,,
இழந்த தணையன் மார்களுக்கு தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் …
(எதுவுமே இருக்கும் போது பெரிதாக தெரியாது அதை இழந்த பின் தான் அதன் வேதனையும் வலியும் புரியும்)
அன்புள்ள அப்பாவுக்கு
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தந்தை போலொரு மனிதர் தரணியிலில்லை
தந்தை சொல் கேட்ட தணையன்
தரங்கெட்டும் போனதில்லை,
தந்தை வழி நடந்தோன் என்றும்
மனங்கெட்டு போ வதில்லை
எழுபதாண்டுகள் அன்போடு வாழ்தாலும்
எங்கள் வாழ்வில் ஐயமில்லை யய்யா
உம் பாசம் பெரியதையா
எங்களைஎல்லாம்
கண்போல வளர்த்த நீங்கள் எங்களை
கண்,கலங்க விட்டு கடும் துயரத்தை தந்து
போன வழி திரும்பா பொது வழி சென்றீரோ
என் தாயின்கண்ணீரை கண்டும்,
 காணாது சென்றீரோ?
கரைதிரும்பா பெருவழி தான் போனீரோ!
அந்த நாள் நினைவுகளும் எங்களோடு
வாழ்ந்த அந்தநாள் ஞாபகங்கங்களும் !
நிழலாடு கின்றதையா !நெஞ்சம் மறவாமல்
இன்றும் வாடுதையா,ு
 நாங்கள் உங்கள் அன்பை சுமந்து ,சுமந்து
அல்லல் படும்படியாய்,ஆக்கிட்டுச்சென்றீரோ!!
அவசரமாய் சென்றீரோ!ஐந்தாறு மாதங்களில்
அவிந்து விடும் அவர் நினவு என பதினாறுக்கு
வந்தாரும் சொன்னார்கள்வாயார அழுதார்கள் !
ஆண்டுகள் பல ஆயினும்
உம் நினைவுகள் அழியவில்லை
எம் நெஞ்சமும் மறக்கவில்லை!
தகப்பன் ஸ்தானத்தில் சரியாக இருந்தீர்கள்
தன் மானத்தோடு வாழவும்
தங்கமான இவ் வாழ்வில்
பொய்யும் திருட்டும் பொறாமையும்
ஆகதென பொறுமையாக சொல்லிச் சொல்லி
வளர்த்தீர்கள் , யாருடைய பணத்தையும்
ஏமாற்றாமல் வாழ்ந்தால்
ஏற்றம் பெற்றுவாழலாம் என்ற
கொள்கைமட்டும் கொண்டவராய்
கொறையில்லாது வாழ்ந்தீர்கள்
 உங்கள் பணம் லட்சக்கணக்கில்
வரவேண்டியதிருந்தாலும் ...
நாம் கொடுக்கவேண்டிய கடனுக்க்காக
சாமிபோல வைத்திருந்த நாலு வயலும்
வித்திங்க ளே நாணயத்த
 காப்பா த்தினிங்களே!
உம் பெருமை மொத்ததையும்
சொல்ல இப்பக்கங்களும் ,
பத்தாது ,என் அறிவும் போதாது
என்வாழ்வில் நான் கற்றதும் பெற்றதும்
ஏராளம் இருப்பின் எனை்பெற்ற
தந்தையை இழந்தது உண்மையில்
ஈடுசெய்ய முடியா இழப்பே!
”நீர்” இல்லா இவ் வாழ்க்கை
நீரில்லா மீன் போலானது!
நீரில்லா நீறோடையில்
நீந்துதற்கு "நீர்" இல்லையே!

Friday, June 2, 2017

ஒற்றைக்கலாச்சார தாக்குதலை உறுதியுடன் எதிர்த்தவர் கவிக்கோ!


தமுஎகச புகழஞ்சலி
தமிழ்க் கவிதையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை நிறுவிக்கொண்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான், இலக்கியத்தோடு நின்றுவிடாமல், சமூக வெளியில் பன்முகப் பண்பாட்டுத் தளத்திற்கு எதிரான தாக்குதல்களை உறுதியாக எதிர்த்துப் போராடியவர்,” என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புகழஞ்சலி செலுத்தியுள்ளது.
கவிக்கோ என்று கவிதை அன்பர்களால் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட அப்துல் ரகுமான் (70) வெள்ளியன்று (ஜூன் 2) காலை சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமுஎகச மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
‘வானம்பாடிகள்’ கவிதை இயக்கக் காலகட்டத்தில்தான் கவிக்கோ அப்துல் ரகுமான் தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கினார். குறிப்பாகப் புதுக்கவிதை வடிவம், அதிலும் குறிப்பாகக் குறியீடுகள், உவமைகள், உருவகங்கள், படிமங்கள் வழியாகக் கவிதைக் கருத்துகளைக் கொண்டு சென்ற முன்னோடிகளில் ஒருவராகத் தடம் பதித்தார். இதில் அவரது முதல் புத்தகமான ‘பால்வீதி’ கவிதைத் தொகுதி ஒரு சோதனை ஆக்கமாக, கவி நேயர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கியது. அதே வேளையில், அவரது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது மரபுத் தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும்தான். இலக்கணக் கட்டுகளை மீறிய அவரது கவிதைப் படைப்புகளுக்கு இலக்கண அறிவே அடிப்படையாக அமைந்தது எனலாம்.
தமிழில் கவிதைக் குறியீடுகள் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற அவர், தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி கவி வடிவங்கள் வேர்கொண்டதிலும் ஒரு சிறப்பான பங்கு வகித்தார். சிலேடை வரிகளால் கவியரங்க மேடைகளுக்கு மக்களை ஈர்த்தார். இலக்கிய வடிவங்கள் மட்டுமல்லாமல், சமூக அக்கறை கொண்ட கருத்துகளையும் தம் படைப்புகளால் பரிமாரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேயர் விருப்பம், பித்தன், மின்மினிகளால் ஒரு கடிதம், பறவையின் பாதை உள்ளிட்ட கவிதை நூல்கள் அவரிடமிருந்து தமிழ் இலக்கிய உலகுக்குக் கிடைத்தன. ‘ஆலாபனை’ என்ற கவிதை நூலுக்காக அவரை சாகித்ய் அகடமி விருது சென்றடைந்தது. தாகூரின் ‘சித்ரா’ கவிதை நூலைத் தமிழில் தந்தார். கவிதைகள் மட்டுமல்லாமல் எம்மொழி செம்மொழி, கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை, மரணம் முற்றுப்புள்ளி அல்ல என்பன உள்ளிட்ட பல கட்டுரை நூல்களும் அவரது கொடையாக உள்ளன.
மதுரையில் பிறந்து, படித்து வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்து பேராசிரியராக வளர்ந்த அவர் பணி ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடியேறி தமது இலக்கியப் பணிகளை ஓய்வின்றித் தொடர்ந்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்துடன் இணக்கமான உறவு கொண்டிருந்த கவிக்கோ, மதுரையில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்துடன் இணைந்து தமுஎகச நடத்திய 10 நாள் சங்க் இலக்கியப் பயிலரங்கில் ஒரு ஆசிரியராகப் பங்கேற்றார். இராக் நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்த மனிதக்கொலைப் போரை எதிர்த்து சென்னையில் நடத்திய கவியரங்கில் கலந்துகொண்டு எழுச்சியூட்டும் கவிதையை அளித்தார்.
மதுரை நகரில் தமுஎகச 40ம் ஆண்டுவிழா சிறப்பு மாநாட்டில் பங்கேற்று, மதவெறி எதிர்ப்பு உறுதிமொழி ஏற்று சிறப்புரையாற்றியது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பன்முகப் பண்பாட்டுத் தளத்தின் மீது தொடுக்கப்படும் வன்மம் மிக்க ஒற்றைக் கலாச்சாரத் தாக்குதலை உறுதியோடு எதிர்த்து நின்றார்.
இத்தகைய பணிகள் மிகவும் தேவைப்படுகிற இன்றைய சூழலில் அவரது மறைவு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாக வந்துள்ளது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவரது இலக்கிய அன்பர்களுக்கும் தமுஎகச சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
--

Wednesday, May 31, 2017

கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

நன்றி தீக்கதிர்


கேள்வி: இந்தியாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரு முதல்வர்களில்நீங்கள் ஒருவர். திரிபுரா ஒரு மிகச் சிறிய மாநிலம். எனவே (ஆதரவாளர்கள் மட்டுமின்றி விமர்சகர்களும் கூட) உங்களது அரசாங்கம் மீது வலுவான கூர்மையான கவனம் செலுத்துகின்றனர். இது உங்கள் மீது கூடுதல் சுமையை உருவாக்குகிறதா?
பதில்: அப்படி எந்த ஒரு சுமையையும் நான்உணரவில்லை. எங்களது மக்கள் சேவையின் ஒரு பகுதியாகவே இதனை நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொரு பிரச்சனை குறித்தும் தெளிவான கொள்கைகள் எங்களிடம் உள்ளன. இந்த கொள்கைகளின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்படுகிறோம். எங்களை பொறுத்தவரை இது வழக்கமான செயல்பாடுதான்!
கேள்வி: கேரளாவின் இடதுசாரி அரசாங்கங்கள் முன்னோடி திட்டங்களுக்கு புகழ் பெற்றவை. நிலச்சீர்திருத்தங்கள், அனைவருக்கும் கல்வி, பொருளாதாரத் திட்டமிடலை மக்களிடம் இருந்து உருவாக்குதல், மக்கள் நலத்திட்டங்கள் என பலவற்றை குறிப்பிடலாம். உங்கள் அரசாங்கத்தின் முன்னோடி திட்டம் என்ன?
பதில்: இந்த அரசாங்கத்தின் இலக்கு என்பது எந்த ஒரு குறிப்பிட்டத் திட்டத்தின் மீதும்கூடுதல் அழுத்தம் என்பது அல்ல; மாறாககேரளாவின் ஒட்டு மொத்த சிறப்பான வளர்ச்சி என்பது தான் இலக்கு ஆகும். இந்த ஒட்டு மொத்த வளர்ச்சியை பெற்றிட பல துறைகளில் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் ஒட்டு மொத்தமாக கேரளாவின் முகத் தோற்றத்தை மாற்றும். முந்தைய இடதுசாரி அரசாங்கங்கள் அமலாக்கிய திட்டங்கள் வரலாற்றில் இடம் பெற்றன. அதே போல தற்போதைய திட்டங்களும் வரலாற்றில் இடம் பெறும் எனும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
கேள்வி:: இன்னும் சிறிது குறிப்பாகச் சொல்ல முடியுமா?
பதில்: இந்த அரசாங்கம் முன்கையெடுக்கும் பல திட்டங்கள் பற்றிக் கூற முடியும். கேரளாசிறந்த கல்வி முறையை கொண்டுள்ளது. எனினும் மாநிலத்தின் பொதுக் கல்வி முறையில் சில பிரச்சனைகள் உள்ளன. இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதுதான் எங்களது முன்னுரிமை. அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம்வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்பறைகளையும் இணையதளம் மூலமும் கணினி மூலமும் இணைத்து சீர்மிகு வகுப்பறைகளை ‘SMART CLASSES’ உருவாக்குவது எங்களது திட்டம். இத்திட்டம் அமலான பிறகு உலகில் உள்ளதலை சிறந்த பள்ளியில் உள்ள அதே வசதிகளை பொது பள்ளியில் படிக்கும் கேரளா மாணவன் பெறுவார்.
மருத்துவத் துறையிலும் இத்தகைய மாற்றங்கள் உருவாகும் என நம்புகிறோம். முதலில் குடும்ப மருத்துவர்கள் கொண்ட ஒரு முறையை உருவாக்குவது என்பது திட்டம். நவீன உயர்தர சிறப்புச் சிகிச்சைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ளன. இத்தகைய சிறப்பான உயர் சிகிச்சைகள் மாவட்டஅளவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மக்களுக்கு தருவதற்கு திட்டம் இயற்றி அமலாக்க முனைந்து வருகிறோம். மருந்துகளின் விலைகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை தரும் வகையில்அடிப்படையில் பல மாற்றங்களை உருவாக்கும் பொருட்டு ‘ஆர்த்ரம்’ (Aardhram) சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதே போல(Life) லைஃப் எனும் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இது Livlihood(வாழ்வாதாரம்), Inclusion(சமூக வளர்ச்சியில் இணைத்தல்),Financial Empowerment (நிதி ஆதாரம்) திட்டம் ஆகும். இதன் மூலம் கேரளாவில் வீடு இல்லாதவர்கள் எவருமே இல்லை எனும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு ஆகும்.
கேள்வி: கேரளா கல்வியிலும் உடல் ஆரோக்கியப் பிரிவிலும் ஏற்கெனவே சிறப்பாக உள்ளது. ஆனால் விவசாயத்தை பற்றி நிலைமை என்ன? உணவு பொருட்களுக்கும் காய்கறிகளுக்கும் கேரளா ஏனைய மாநிலங்களையே மிகவும் சார்ந்திருக்கும் நிலை உள்ளதே?
பதில்: இப்பிரச்சனை குறித்து நாங்கள் உணர்ந்துள்ளோம். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது குடிமக்களின் உரிமை. எனவேதான் இயற்கை விவசாயத்தை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். கேரளாவின் விவசாயத் துறையை இயற்கை விவசாயம் மூலம் அடிப்படையிலேயே மாற்றுவதுதான் எங்களது நோக்கம் ஆகும். காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். விவசாயத்திற்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் தற்பொழுது தரிசாக உள்ள நிலங்களையும் விளை நிலங்களாக மாற்ற நாங்கள் முனைகிறோம்.
கேள்வி: கேரளாவின் பொருளாதாரம் குறித்தும் கவலை தெரிவிக்கப்படுகிறது. வேலையின்மை அதிக அளவில் உள்ளது. கேரளாவில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. பிரச்சாரத்தின் பொழுது இலட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கப் போவதாக நீங்கள் கூறினீர்கள். பொருளாதரத்தை சீர்செய்ய உங்களது திட்டம் என்ன?
பதில்: வளங்கள் மிகுதியாக உள்ள மாநிலம் அல்ல கேரளா. இது ஒரு மிகப்பெரிய சவால்ஆகும். வலுவான வளங்கள் இருந்தால்தான் தொழில்கள் வளரும். இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க ‘கேரளா உள்கட்டமைப்பு முதலீடு நிதியகம்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். இந்த அமைப்பின் மூலம் ரூ. 50,000 கோடி திரட்டி உள்கட்டமைப்புப் பணிகளைச் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.
கேள்வி: ஆனால் தொழில்கள் கேரளாவிற்கு வருமா? தொழில் நடத்த உகந்த மாநிலமாக கேரளா இல்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர். தீவிர தொழிற்சங்க சூழல் முதலீட்டாளர்களை அண்டவிடுவது இல்லை.....
பதில்: இந்தக் கூற்று உண்மை அல்ல. இத்தகைய தொழிற்சங்க செயல்பாடுகள் காரணமாக எந்த ஒரு தொழிலாவது கேரளாவில் மூடப்பட்டு உள்ளதா? இங்கு செயல்படும் எந்த ஒரு தொழில் குழுமமாவது தொழிற்சங்கங்கள் காரணமாக நாங்கள் தொழிலை நடத்த முடியவில்லை என்று கூறியுள்ளார்களா? கேரளா குறித்து பல அவதூறுகள் பரப்பப்படுகின்றன. அதில் இதுவும் ஒன்று. கேரளாவில்தொழில் வளத்தைப் பெருக்கிட நாங்கள் புதிய தொழில் கொள்கையை அறிவிக்க உள்ளோம். தொழிலை உகந்தமுறையில் செய்வதற்கான சூழலை உருவாக்குவதே எங்களது அணுகுமுறை. தொழில்கள் தொடங்கிட கேரளா ஒரு சிறந்த மாநிலமாக உருவாகும்.
கேள்வி:: உங்கள் கட்சி பாஜக குறித்தும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி குறித்தும்கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறது. நடுவண் அரசுடன் உங்களது உறவு எப்படி உள்ளது?
பதில்:இது இரண்டு பக்கங்களை கொண்டுள்ளது. மோடியின் தலைமையில் செயல்படும் நடுவண் அரசாங்கத்தின் கொள்கைகளில் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதே சமயத்தில் மாநிலத்திற்கு நடுவண் அரசுடன் சிலபிரச்சனைகளும் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு (பணமதிப்பு நீக்கம் காரணமாக) கேரளா சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைக்க கேரளாவின் அனைத்து கட்சிகளும் எனது தலைமையில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால் எங்களுக்கு நேரம்ஒதுக்கப்படவில்லை. பொதுவாக பிரதமர்கள் ஒரு மாநில முதல்வரின் தலைமையில் வரும் குழுவை சந்திப்பதில் இப்படி தவறான நிலைபாடுகள் எடுப்பதில்லை. இத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும் கேரள மாநில அரசாங்கத்திற்கும் நடுவண்அரசாங்கத்திற்கும் இரண்டு அரசாங்க அமைப்புகள் என்ற முறையில் உறவு சீராகவே உள்ளது. உதாரணத்திற்கு நாங்கள் பதவி ஏற்றவுடன் 2016இல் தில்லிக்குச் சென்றோம். பல தலைவர்களை சந்தித்தோம். பிரதமரையும் சந்தித்தோம். அப்பொழுது பிரதமர் கேரளாவில் ஆயுர்வேதத்திற்காக ஒரு நிறுவனத்தை தொடங்க முடியுமா என்று கேட்டார். அதற்காக நடுவண் அரசு உதவ முடியும் எனவும் சொன்னார். இப்பொழுது உலக தரம் வாய்ந்த ஆயுர்வேத நிறுவனத்தை தொடங்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். நாங்கள் வேறு சில ஆலோசனைகளையும் முன்வைத்தோம். அவற்றை நடுவண் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. எனவே மத்திய, மாநில உறவுகள் சீராகவே உள்ளனஎன கூறலாம்.
கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் என்ற முறையில் பாஜகவின் வளர்ச்சி பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? பாஜக மத்தியில் பெரும்பான்மையுடன் உள்ளது. மாநில சட்ட மன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது...
பதில்: இப்பொழுதுள்ள அரசியல் சூழலை நீங்கள் நோக்கினால் நாம் ஒரு ஆபத்தான கட்டத்தில் இருந்து வருகிறோம் என்பதை உணர்வீர்கள். மற்ற கட்சிகளிடமிருந்து பாஜக எப்படி வேறுபடுகிறது எனில் பாஜகஆர்.எஸ்.எஸ் எனும் அமைப்பின் பிடிக்குள் உள்ளது. அதனால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்தான் முக்கிய முடிவுகளை நேரடியாக தீர்மானிக்கிறது என்பது தெளிவு. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகள் இந்தியாவின் நலனுக்கு உகந்தது அல்ல. ஆர்.எஸ்.எஸ் மதச்சார்பின்மையை ஏற்றுகொள்வது இல்லை. ஒரு பன்முகத்தன்மை உள்ள நமது தேசத்திற்கு இது மிகவும் ஆபத்தானது. இத்தகைய அரசியல் சட்டத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு எதிராக ஒரு வலுவான எதிர்ப்பு இயக்கம் உருவாக்குவது அவசியம் ஆகும். ஆனால் அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சி தேசம் முழுவதும் செயல்படுகிறது என்றாலும் பாஜகவிற்கு எதிராக ஒரு வலுவான எதிர்ப்பை உருவாக்கும் வலுவை இழந்துள்ளது. பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைவதை நாம் பார்க்கிறோம். தேசியத் தலைவர்களும் மாநிலத் தலைவர்களும் ஏன் முன்னாள் காங்கிரஸ் முதல்வர்களும் கூட பாஜகவில் இணைகின்றனர். எனவேபாஜகவிற்கு எதிரான இந்த போராட்டத்தில் காங்கிரசை முழுமையாக நம்புவது பொருத்தமானது அல்ல. காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டுமேவலதுசாரி (பொருளாதாரக்) கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயம் கொள்கைகளை அமல்படுத்துவதில் காங்கிரஸ் முன்னணியில் இருந்தது. பாஜக அதே பொருளாதாரக் கொள்கைகளைதான் பின்பற்றுகிறது. பொருளாதாரக் கொள்கைகளை பொறுத்த வரை காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. எனவேதான் காங்கிரசை ஒரு பெரிய எதிரியாக பாஜக பார்ப்பது இல்லை. பாஜகவிற்கு பெரிய எதிரி இடதுசாரிகள்தான்! இன்றையை சூழலில் இடதுசாரிகள் இந்திய அளவில் வலுவாக இல்லை. இருப்பினும் பா.ஜ.க.விற்கு இடதுசாரிகளை பார்த்து தான் பயம் உருவாகிறது. இதனை இடதுசாரிகள் ஆட்சியில் உள்ள கேரளாவிலும் திரிபுராவிலும் நீங்கள் பார்க்க முடியும்.
கேள்வி: கேரளாவிலும் பா.ஜ.க. வளர்கிறது.அரசியல் ரீதியாக அது தீண்டப்படாத கட்சியாக இல்லை. கேரளாவில் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் பாஜகவிற்கு உள்ளார்.அதன் வாக்கு விகிதமும் அதிகரித்துள்ளது. மற்ற கட்சிகளுக்கு இணையாக ஊடகங்களும் பாஜகவிற்கு முக்கியத்துவம் தருகின்றன.
பதில்: கேரளாவில் அனைத்துவிதமான அரசியல் நாடகங்களையும் பாஜக அரங்கேற்றி வருகிறது. எனினும் பொது ஆதரவு பெற இயலவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் (நேமம்/திருவனந்தபுரம்) காங்கிரசின் உதவியுடன் வென்றது. காங்கிரஸ் தனதுவாக்குகளை பாஜகவிற்கு தந்து அதற்கு பிரதிபலனாக வேறு இடங்களில் பாஜகவின் வாக்குகளைப் பெற்றது. ஆனால் பாஜக தனது வலுவைவிட அதிகமாக ஊடகங்களின் ஆதரவை பெறுகிறது என்பது உண்மைதான்! மத்தியில் அது ஆட்சியில் உள்ளது என்பது காரணமாக இருக்கலாம். அதனாலேயே இங்கு பாஜக வளர்கிறது என்று கூற முடியாது.
கேள்வி: மாநில மற்றும் மத்திய பாஜக தலைமை இரண்டுமே கேரளாவில் அதன்ஊழியர்களை உங்களது கட்சி தாக்குகிறது என்று குற்றம் சாட்டுகிறது. உங்கள்அரசாங்கம் பதவியில் அமர்ந்த பிறகுஆர்.எஸ்.எஸ். மற்றும் உங்கள் கட்சியைசார்ந்த பல ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சுழற்சியை தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?
பதில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழித்திட பல வழிகளில் ஆர்.எஸ்.எஸ். முயன்றுள்ளது. அதில் ஒன்று நேரடிகொலை வெறித் தாக்குதல் ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பே இத்தகையதாக்குதல்கள் கட்சி மீது ஆரம்பித்துவிட்டன. சம்பந்தப்பட்ட அமைப்புகளை பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதை நாம் உத்தரவாதம் செய்தோம். அதன் பின்னர் நல்ல மாற்றம் ஏற்பட்டது. அதற்கு பின்னரும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. எனினும் பேச்சுவார்த்தைகள் மூலம் இதற்கு தீர்வு காண்பதை தொடர்வது என திட்டமிட்டுள்ளோம்.
கேள்வி: தேசிய அளவில் நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் உங்களது பலம்சுருங்கி வருவது உங்களுக்கு வேதனையை தருகிறதா?
பதில்: கட்சியின் தளத்தை சீரமைத்திட ஒவ்வொரு மாநிலக் கிளையும் முயன்று வருகின்றன. எங்களுக்கு பெரிய பின்னடைவு என்பது மேற்கு வங்கத்தில் ஏற்பட்டது. ஆனால் மேற்குவங்கக் கிளைஇந்த சவாலை எதிர்கொள்ள தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அது நல்ல தாக்கத்தையும் உருவாக்கியுள்ளது. மற்ற மாநிலங்களில் எங்களது கட்சி சிறிய அமைப்பாகவே உள்ளது. ஆனால் சில இடங்களில் கட்சி அமைத்தகூட்டணிகள் எங்களை பலவீனப்படுத்தியுள்ளது. எங்களது தவறை உணந்துள்ளோம். எங்களது சுயேச்சையான வலுவை அதிகரித்திட முயன்று வருகிறோம். எனினும் தேசிய அளவில் எங்களது வலு எப்படி இருந்தாலும் இடதுசாரிகள் மட்டும்தான் மதவெறி சக்திகளுக்கு எதிராக வலுவாக (அரசியல்,தத்துவார்த்த மற்றும் கலாச்சார) களத்தில் போரிட இயலும். எனவேதான் பாஜக மற்றும் ஏனைய வலதுசாரிக் கட்சிகள் இடதுசாரிகளை தாக்குவது என்பது தொடர்கிறது.
நன்றி : இந்து 31.05.2017 (இந்து நிருபர்ஸ்டான்லி ஜானி அவர்களுக்கு அளித்த பேட்டி)
தமிழில்: அ.அன்வர் உசேன்

பினராயி விஜயன் அதிரடி

மாட்டிறைச்சி விவகாரத்தை விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்


சென்னை, மே 31 -
மாட்டிறைச்சி தொடர்பான விவகாரத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மோடி அரசுக்கு ஆரம்பம் முதற்கொண்டே மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.அசைவம் உண்ணும் பெரும்பான்மை மக்களின் உணவு உரிமையில் கைவைக்கும் பாஜக அரசின் இந்துத்துவா நடவடிக்கை ஏற்க முடியாது என்று அறிவித்துள்ள அவர், இப்பிரச்சனையில் மத்திய அரசுக்கு எதிராக மாநில முதல்வர்களின் கருத்தையும் திரட்டி வருகிறார்.
இந்நிலையில், புதனன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், மாடு விற்பனையை ஒழுங்குபடுத்த மத்திய அரசுக்கு உரிமையில்லை என்றும், இவ்விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவாதிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
“மாடு விற்பனையை ஒழுங்குபடுத்தக் கூடிய அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை; அதே போன்று இறைச்சிக்காக மாடு வெட்டுவதை முறைப்படுத்தும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கு இல்லை; மத்திய அரசின் ஒழுங்குபடுத்தும் விதிகள் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்; உணவிற்காக கால்நடைகளை வெட்டுவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டது; ஆனால், மத்திய அரசின் உத்தரவு விலங்குகள் வதைத் தடை சட்டத்திற்கு எதிரானது; மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுகிறது; அதற்கு பாஜக-விற்கு உரிமை இல்லை.” என்று கூறியுள்ள பினராயி விஜயன், “இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

பெருமாநல்லூர், அவிநாசியில் மதுக்கடையை மூடக்கோரி போராட்டம்

நன்றி தீக்கதிர்

பெருமாநல்லூர்,அவிநாசி
அவிநாசி, மே 31-
பெருமாநல்லூர், அவிநாசி பகுதிகளில் மக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருமாநல்லூரில் இரண்டு இடங்களில் மாநில நெடுஞ்சாலைக்கு மிக அருகில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பையும் மீறி சில தினங்களுக்கு முன் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது. இதனால் அய்யம்பாளையம், பாரதியார் காலனி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த இரு கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பெருமாநல்லூர் பகுதியில் எந்த இடத்திலும் மதுபானக் கடை அமைக்கக் கூடாது எனக்கோரி அனைத்துக் கட்சி, பொது நல அமைப்பு, பொதுமக்கள் சார்பில் பெருமாநல்லூர் நான்கு வழிசாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், அவிநாசி புதிய பேருந்து நிலையம் பின்புறம் குப்பை கிடங்கு மற்றும் அவிநாசி - மங்கலம் சாலை இணைக்கும் சாலையில் அருகருகே அண்மையில் இரு மதுக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ஆகவே, இந்த இரு கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனக்கோரி அப்பகுதி மக்கள் மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Monday, May 29, 2017

அப்படி என்ன சாதித்துவிட்டது பினராயி அரசு?



நன்றி = தீக்கதிர்

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஓராண்டு நிறைவு விழாவில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகிறார்.
திருவனந்தபுரம், மே 26-

பினராயி விஜயனின் ஓராண்டு கால ஆட்சியை பாராட்டாத ஊடகங்களே இல்லை என்ற அளவிற்குமிகப்பெரும் சாதனைகளை படைத்து முதலாண்டு நிறைவு விழாவை கொண்டாடி இருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு.இது இடதுசாரிகளின் ஆட்சி; நவீன தாராள மயக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான ஆட்சி;
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பின்பற்றி வரும் தீவிர மதவெறி - அதிதீவிர தாராள மயம் ஆகிய இரண்டு தீமைகளுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டே நாடே வியக்கும் சாதனைகளை படைத்து நிற்கிறது இந்த இடதுசாரிகளின் ஆட்சி.இதை கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல; கம்யூனி ஸ்ட்டுகளின் எதிரிகளாகவே ஊடக உலகில் செயல்படுகிற பல ஏடுகள் எழுதி இருக்கின்றன.
கேரளத்தில் மாத்ருபூமியும், மலையாள மனோரமாவும் மற்றவர்களின் விமர்சனங்களை பிரதிபலித்தாலும் பினராயி அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பாராட்டியிருக்கின்றன. வணிகத்துறையில் முக்கியமான ஏடுகளில் ஒன்றாக கருதப்படும் ‘லைவ் மின்ட்’ ஆங்கில ஏடு, பினராயி அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு ‘‘இந்தியா வின் முன் மாதிரி அரசு கேரளத்தின் இடதுசாரி அரசே’’ என புகழ் மாலை சூட்டியிருக்கிறது.அப்படி என்ன கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு சாதித்துவிட்டது என்பதையும் ‘லைவ் மின்ட்’ ஏடு பட்டியலிட்டிருக்கிறது.
குறிப்பாக பினராயி அரசின் ஒன்பது நடவடிக்கைகள் - சிறியதுபோல தெரிந்தாலும் - இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் மேற்கொண்டிராத - சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிற முக்கியமான நடவடிக்கைகள் என குறிப்பிட்டிருக்கிறது.
பினராயி அரசு பதவியேற்றவுடன் முதல் பட்ஜெட்டில் முதல் அறிவிப்பாக பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு வகைகள் மீது "கொழுப்பு வரி" விதித்தது. இந்தியாவில் யாரும் செய்யத் துணியாத காரியம் இது. கேரள மக்களின் - கேரளத்துக் குழந்தைகளின் சுகாதாரத்தை - உடல்நலனை பிரதானப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை எளியது போலத் தெரிந்தாலும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நடவடிக்கை. உள்நாட்டுத் தயாரிப்புகள் மீது கவனத்தை திருப்ப வைத்த நடவடிக்கை என மின்ட் ஏடு சுட்டிக்காட்டியுள்ளது.
கேரளம் முழுவதும் ஆயிரம் இடங்களைத் தேர்வு செய்து அந்தப் பகுதி முழுவதும் இலவச வைபை மண்டலமாக அறிவித்து செயல்படுத்தியது. அது மட்டுமின்றி, சுமார் 20 லட்சம் ஏழை- நடுத்தர குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. இதற்காக தனது முதல் பட்ஜெட்டில் ரூபாய் ஆயிரம் கோடியை ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்தியது. இந்தியாவில் பணபலம் மிக்க மாநிலங்களில் கூட இது சாத்தியமாகவில்லை. ஆனால், "இணைய தள சேவை என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை" என்று இடது ஜனநாயக முன்னணி அரசின் நிதியமைச்சரும், பொருளாதார நிபுணருமான டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் குறிப்பிட்டதை அப்படியே செயல்படுத்தியிருக்கிறது பினராயி அரசு.
இவற்றைவிட மிக முக்கியமான மூன்றாவது நடவடிக்கை ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்னுதாரணம். தமிழகம் உட்பட எந்த மாநிலத்திலும் பிற மாநிலங்களிலிருந்து வந்து குறைந்த கூலிக்கு வேலைசெய்து பிழைப்பு நடத்தும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த வசதிகளும் இல்லை. கேரளத்தில் இதை மாற்றிக் காட்டியது பினராயி அரசு. பிற மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து கேரளத்தில் பல்வேறு துறைகளில் முறைசாராத் தொழிலாளர்களாக கிட்டத்தட்ட 34 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை 2016 ஜூலை முதல் அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது.
திருநங்கைகளுக்கு "திருநங்கை " என்று பெயர் வைத்ததோடு தமிழகம் தனது கடமையை முடித்துக் கொண்டது. ஆனால் திருநங்கைகளுக்கு அரசுத் துறையில் பெரிய அளவில் இடஒதுக்கீடு செய்து பணிவாய்ப்பை ஏற்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பித்து செயல்படுத்தியிருக்கிறது பினராயி அரசு. கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டமாக 60 திருநங்கைகள் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அரசுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றில் திருநங்கைகள் அதிகாரப்பூர்வமாக வேலைக்கு எடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இது தவிர, 2017 பட்ஜெட்டில் திருநங்கைகளுக்கு என ரூ.10 கோடியை ஒதுக்கி, கேரளம் முழுவதும் உள்ள வயது முதிர்ந்த திருநங்கைகள் அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்கியிருக்கிறது. கடந்த ஏப்ரலில் திருநங்கைகளுக்கு என பிரத்யேகமாக ஒரு விளையாட்டு விழாவையும் நடத்தியிருக்கிறது. இதுவும் இந்தியாவிலேயே முதல் நடவடிக்கை ஆகும்.
ஊடகங்கள் பெரிய அளவிற்கு வெளியிடாத அதி முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை, கேரளத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இளம்பெண் குழந்தைகளுக்கு சானிடரி நாப்கின் இலவசமாக வழங்கும் திட்டம். இதை நடப்பு கல்வி ஆண்டு முதல் பினராயி அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ளது. இதற்காக ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளம்பெண் குழந்தைகளின் சுகாதாரம் என்பது அவர்களது அடிப்படை உரிமை; சானிடரி நாப்கின் வாங்க முடியாமல் பல பெண் குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதை தடுப்பதும் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உணரச் செய்வதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என கடந்த மே 17 அன்று பினராயி விஜயன் தனது முகநூல் பக்கம் வழியாக அறிவிப்பு வெளியிட்டார். "ஸி பேடு" (She Pad) என அமலுக்கு வரும் இந்த திட்டம் கேரள மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்; ஆனால் அறிவிப்போடு அது நின்றுவிட்டது. கேரளத்தில் அது அமலாகிறது.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு என்று இந்தியாவில் எங்குமே சிறப்புப் பாடப் புத்தகங்கள் இல்லை. கேரள கல்வித்துறை இந்த கல்வி ஆண்டு முதல் இத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கிறது. தலைசிறந்த கல்வியாளர்கள், மனநல வல்லுநர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் ஆலோசனைகளுடன் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பிரத்யேக பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 24 வகையிலான உடல் ஊனம் மற்றும் மனநல பாதிப்பு அடைந்த குழந்தைகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்படியெல்லாம் ஒரு முயற்சி கூட எந்த மாநிலமும் இதுவரை எடுத்ததில்லை.
அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போன்று அதிரடியான மற்றொரு திட்டத்தை கடந்த ஏப்ரலில் பினராயி அரசு அமலுக்கு கொண்டு வந்தது. ரூ. 6 லட்சமும் அதற்கு குறைவாகவும் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ள அனைத்து கல்விக் கடன்களையும் அரசாங்கமே செலுத்தும் என்பது தான் அந்த அறிவிப்பு. இதற்காக 900 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்தது பினராயி அரசு. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கல்விக்கடனுக்காக வங்கிகள், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களிடமும் வசூலிக்கும் பொறுப்பைக் கொடுத்து கந்துவட்டிக்காரர்களைவிட கொடூரமான முறையில் மாணவர்களை விரட்டி விரட்டி வேட்டையாடுகிற நிலையில், ஏழை- நடுத்தரக் குடும்பத்து மாணவர்களைத் தனது கரங்களில் தாங்கிப் பாதுகாக்கும் இந்த மகத்தான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது இடது ஜனநாயக முன்னணி அரசு.
மே 29 அன்று கோழிக்கோட்டில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நாட்டிலேயே முழுமையாக அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி செய்து கொடுத்த மாநிலமாக கேரளத்தை அறிவிக்க இருக்கிறார் முதலமைச்சர் பினராயி விஜயன். கடைசியாக எஞ்சியிருந்த 1.30லட்சம் வீடுகளும் கடந்த ஏப்ரல் 1ஆம்தேதி கணக்கீட்டின்படி முழுமையாக மின் வசதி செய்து தரப்பட்டுள்ளன.
இவற்றில் 40 ஆயிரம் வீடுகள் தாழ்த்தப்பட்ட மக்களுடையவை; 20 ஆயிரம் வீடுகள் பழங்குடி மக்களுடையவை. இத்திட்டத்திற்காக ரூ. 124 கோடி ஒதுக்கீடு செய்து முழுமையாக செலவிடப்பட்டிருக்கிறது. உண்மையில், கேரளா நீண்ட பல்லாண்டுகளுக்கு முன்பாகவே முழுமையான மின்மயமாக்கப்பட்ட மாநிலமாகிவிட்டது என்ற போதிலும் முழுமையான மின்மயம் ஆக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கப்படுவதற்கான மத்திய அரசின் மிக நுணுக்கமான விதிமுறைகளை செயல்படுத்தாமல் இருந்தது. அதாவது ஒரு சிறு குடிசை கூட விடுபடக்கூடாது என்ற அந்த விதியை பினராயி அரசு தற்போது பூர்த்தி செய்து கேரளத்தை ஜொலிக்க வைத்திருக்கிறது.
இந்தியாவின் நூறு சதவீத முழுமையான சுகாதாரம் அடைந்த மாநிலமாக மாறும் மிகப்பெரும் நோக்கத்துடன் கடந்த நவம்பர் மாதத்தில் பினராயி அரசு கேரளத்தை பொதுவெளியில் மனிதக்கழிவுகள் இல்லாத மாநிலமாக அறிவித்தது. கடந்த ஒரே ஆண்டில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக செலவிட்டு மாநிலம் முழுவதும் 2லட்சம் புதிய கழிப்பறைகளை கட்டி முடித்திருக்கிறது. இந்தியாவின் மிக அதிக மக்கள்தொகை உள்ள மாநிலங்களில் இதை சாதித்துக் காட்டியிருக்கிற முதல் மாநிலம் கேரளமே. ஏற்கெனவே சிக்கிம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை இதை சாதித்திருந்தாலும் அவை சிறிய மாநிலங்கள். மக்கள் தொகையும் மிகக் குறைவு.
- இந்த ஒன்பது சாதனைகளையும் ‘லைவ் மின்ட்’ஏடு விரிவாகப் பட்டியலிட்டு விளக்கியிருக்கிறது. இவற்றுடன் இன்னும் பல்வேறு சாதனைகளைப் புரிந்த பெருமிதத்துடன் மே 25 வியாழனன்று திருவனந்தபுரத்தில் தனது முதலாமாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது இடது ஜனநாயக முன்னணி அரசு.அந்த விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளத்தின் மலைப்பகுதி மற்றும் கடலோரப் பகுதி நெடுஞ்சாலைகளை மிக விரைவாக மேம்படுத்துவதே அடுத்த உடனடி நடவடிக்கை என அறிவித்தார்.திருவனந்தபுரத்தில் உள்ள நிஷா காந்தி திறந்தவெளி கலையரங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த அந்த எழுச்சிமிகு விழாவில்உரையாற்றிய பினராயி, ஓராண்டு காலத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு நிறைவேற்றியுள்ள காரியங்கள் கேரளத்தின் எதிர்க்கட்சிகளை தூங்கவிடாமல் செய்திருக்கின்றன எனக்குறிப் பிட்டார்.
கேரளத்து மக்கள், வெளிநாடு வாழ் கேரளமக்கள் மற்றும் அரசியல் வேறுபாடுகள் மறந்து அரசாங்கத்தின் நல்ல நடவடிக்கைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அனைத்துத் தரப்பு மக்களும் தமது அரசின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.நாடே போற்றும் சாதனைகளுடன் தனது ஓராண்டை பினராயி அரசு நிறைவுசெய்த தருணத்தில், அரசுக்கு எதிராக ஏதேனும் போராட்டம்நடத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் காங்கிரசும், பாஜகவும் சில இடங்களில் ஊர்வலங் களை நடத்தின. எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும், பினராயி அரசாங்கம் நன்றாக செயல்படவில்லை என்று விமர்சித்தனர். ஆனால் அவர்களால் பினராயி அரசின் செயல்பாடின்மை குறித்துப் பட்டியலிட முடியவில்லை.